FKart PrmotionalBanners

யோகாசனம் ஒரு அறிமுகம்!

யோகாசனம் ஒரு அறிமுகம்!

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_155506000000.jpg
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

குரு வணக்கம்:

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி

புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி

என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.

பதஞ்சலி யோக சூத்திரம்

காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.

உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.

யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்

அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை

1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி

1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.

அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.

ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.

இ) அஸ்தேயம் :  தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை  பிறருக்காகவும் பயன்படுத்துவது.

ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.

உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.

சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.

2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என  5 நெறிமுறைகள் அவசியம்.

அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.

ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.

இ) தமாஸ் (தபஸ்) :  ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.

ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.

உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.

3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது.

ஆசனம் - தேகப்பயிற்சி - ஒரு ஒப்புமை:

ஆசனம்        

1. ஒரு அசைவற்ற நிலை  
2. சக்தியைத் தேக்கிடுவது  
3. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பேணுவது
4. உடலுக்கும், மனதுக்கும் பணி ஓய்வு அளிப்பது
5. சுகம். அதாவது, ஆழ்ந்த உடல், மன மகிழ்வுக்கே முக்கியத்துவம்
6. திட உணவுப் பொருளை நம்பியிருப்பதைக் குறைப்பது
7. நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்
8. தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்ப்பது
9. இறையிடம் இட்டுச் செல்லும் நோக்கினால் உருவானது
10. உடலைக் குளிர்விக்கின்றது
11. உடல் உள் உறுப்புகளைப் பிசைந்து விட்டு இயங்க செய்கின்றது
12. நாடி நரம்புகளையும், தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது
13. இதயத்திற்கு நல்ல ஓய்வு
14. எவ்வயதினரும் செய்யலாம்
15. சக்தி உருவாகும்
16. மனஅழுத்தம் முற்றிலும் நீங்கும்

தேகப்பயிற்சி

1. அசைவிக்கும் செயல்பாடு
2. சக்தியைப் பயன்படுத்துவது
3.உடல் தசையமைப்பை மேம்படுத்துவது
4.உடலைப் பணிக்கு தயாரக்கிடுவது
5. கடுமையான பணிகளில் வலி,சிரமத்தை தாங்கிட முக்கியத்துவம்
6. மென்மேலும் திடஉணவை நம்பியிருக்கச் செய்கிறது.
7. நோய்வாய்ப்பட்டிருப்பின் செய்திட இயலாது
8. போட்டிமனப்பான்மையையும் அதனால் பிணக்கையும் கூட்டிடலாம்
9.இகவாழ்வில் நலம்பேணும் நோக்கு
10.உடலை உஷ்ணப்படுத்துகின்றது
11.வெளித்தோற்ற உறுப்புக்கு மட்டுமே பயன் தருவது
12.உடலின் புறத்தசைகளை மட்டுமே இயங்கச் செய்கின்றது
13.இதயத்தில் இரத்தஓட்டம் மிகுந்து வேகமாக துடிக்க வைக்கும்
14.முதியோர் செய்யக்கூடாது
15.சக்தி விரயமாகும்
16.மனஅழுத்தம் மிகும்

ஆசனம் பழகலில் நியதிகள் சில: நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின் ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து அதன்படி செய்து பழகுவதும் கூடாது. முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத் தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும், யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும் தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.

ஆசனம் பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின் செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும், பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம். எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம் செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம் செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.

காற்றோட்டமுள்ள இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக மெதுவாகவே  இருக்க வேண்டும்.  தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு, முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும், மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும், உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.

1. அசைவின்மை:  எவ்வளவு  நொடிகள் அல்லது நிமிடங்கள் உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள் செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.

2. சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.

பெண்களுக்கான சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர். இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.

பிராணயாமம்

பிராண சக்தி : பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.

பந்தங்கள் : பிராணனைத் தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில் வைக்க, அல்லது தடுத்து மாற்றிடங்களுக்குப் பரவச் செய்ய பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முத்திரைகள் : பல முத்திரைகள் ஆசனங்களோடு இணைந்ததாகவே இருக்கின்றன. உடலையும், கை விரல்களையும் குறிப்பிட்ட வகையில் வடிவமைத்துக் கொண்டு இணைப்பது முத்திரையாகும். ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகளை முறையே கற்காமல் நேரடியாக பிராணயாமத்திற்குச் செல்வது தவறாகும். உள நோயும், உடல் நோயும் வராதிருக்க மனம் அமைதியுற பிராணசக்தி, ஜீவசக்தி இத்தூல சரீரத்தில் பெருக, தொடர்ந்து ஜபம், தவம் செய்வோம். மன ஆற்றலுக்கு யோகமும் உடலாற்றலுக்கு ஆசனமும் எனப் புதிய இருவினை செய்வோம். இன்புறுவோம்.

அர்த்தமுள்ள யோகம் + ஆசனம்

யோகம்                                 ஆசனம்

உளவியல்                          உடலியல்
அகத்தூய்மை                   புறத்தூய்மை
புலன் கட்டுக்கோப்பு      உடலாற்றல் மேம்பாடு
மனஆற்றல்                       உட்சுரப்பிகள் உயிர்ப்பித்த
நினைவாற்றல்                 செயலாற்றல் துலக்கம்
உணர்வாற்றல்                  வளர்சிதைமாற்ற செயல்பாடு

தியானம்                                           பிராணயாமம்

ஆழ் மனத்தடவியல்                       உயிரியல்
நீள் நினைவு நோற்றல்                  உயிர் பரவல்
அறிவு வடிவு                                      உயிர்க்காற்றின் உலா
ஆத்மா தரிசனம்                               உயிர்க்காற்றின் உலா
ஆன்ம நிவேதனம்                            உலகுயிர் உடலுயிர் ஒற்றுமை

யோகாசனம் பழகுவதற்கு இங்கு சில முக்கிய ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

இது தவிர இன்னும் பல ஆசனங்களையும் கற்றுப் பழகிட முயலவும். முக்கிய ஆசனங்கள் என்பது பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் தேக நலன் பராமரிக்க, வேறு சில ஆசனங்கள் மேலும் முக்கியமாக, அவசியமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததை தவறாமல் செய்து நன்மை பெறவும். ஆசனங்கள் செய்யும் முன்பும், செய்திடும் போதும் அவசரப்படாது இருப்பது போலவே, செய்த பின்னரும் சில நிமிடங்களாவது அமைதியாக, வேறு பணியில் ஈடுபடாமல், இறைவனை தியானித்திருப்பது நல்லது. குறிப்பாக உடனே குளிப்பதையும், திரவ உணவையும் கூட தவிர்க்கவும்.

Comments

Popular Posts