FKart PrmotionalBanners

வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை

முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.

நல்லூர் கந்தன்

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கு “சஷ்டியில் விரதம் இருந்தால் அதன் அருள் அகப் பையில், அதாவது உள்ளத்தில் வரும்” என்பதுதான் உண்மையான பொருள். இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.
முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.
விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்.
விரத பலன்
ஆறு நாள்களும், ஆறு காலங்களும் உண்மையாக முருகனை பூஜித்து வழிபடுவோருக்கு வேண்டு வரம் கிட்டும் என்பது மட்டுமில்லை, முருகனது அருட்காட்சியும் கிடைக்கும். கந்த சஷ்டி விரதத்தை மேற்கொண்டு, வலன் என்ற அசுரனை இந்திரன் அழித்தான் என்பதிலிருந்தே இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஓம் றீம் ஐயும் கிலியும் ஔவும் சௌவும் சரஹண பவ

வள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழமை விரதம். ஆனால் இது முழுக்க முழுக்க முருகப்பெருமானுக்குரிய விரதம் என்று கூறி விட இயலாது. வள்ளலார் ஆரம்பத்தில் திருத்தணிகை முருகப் பெருமானைத் தொழுது அவரது காட்சி பெற்றவர் என்பது இங்கே நினைக்கத் தகுந்தது.

வள்ளலார் இராமலிங்க அடிகளார்

வள்ளலார் ஆரம்ப காலகட்டத்தில் முருகனைத் தொழுது வணங்கியவர். சுப்ரமணியம் என்பது பற்றி அவர், “ சுப்பிரமணியம் என்பது என்னை? நமது புருவ மத்தியில் உருட்சியாய் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு  மணிப் பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதி மணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த  சுத்த விவேகமென்பதையும் ஷண்முகம் என்பார்கள்.  ஆறு ஆதாரங்களில் உள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும் சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உள்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்………”
- என்று சுப்பிரமணிய தத்துவத்தைப் பற்றி விளக்கி இருக்கிறார் வள்ளலார்.

திருத்தணிகை முருகன்
செவ்வாய்க் கிழமை விரதம் பற்றி அடிகளார் கூறி இருக்கும் குறிப்பு.
“திங்கட்கிழமை இரவில் பலகாரஞ் (பழ ஆகாரம்) செய்து, செவ்வாய்க்கிழமை அருணோதயத்தி லெழுந்து, திருநீறு நெற்றியில் மாத்திரம் அணிந்து, நல்ல நினைப்புடன் அங்கசுத்தி, தந்தசுத்தி முதலானவையுஞ் செய்து கொண்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த சலத்தில் ஸ்நானஞ் செய்து, விபூதியை சலத்தினால் குழைத்து அனுஷ்டானப்படி தரித்துக் கொண்டு, கண்பதியை நினைத்து , பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை நூற்றெட்டு முறை சபித்து, பின்பு சிவத்தியானம் செய்து, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையனாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு, பின்பு ஔம் வயித்தியநாதாய நம வென்று நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு இரண்டில் எந்த அளவாவது செபித்து, ஒரு பலம் மிளகு சீலையில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று ஔரிடத்தில் வைத்து, சிவனடியார் ஒருவர்க்கு உபசாரத்தொடு அமுது படைத்து, பின்பு சுசியொடு பச்சரிசிப் பொங்கல் முதலான புசிப்பை அரையாகாரம் முக்கால் ஆகாரங் கொண்டு, அன்று மாலையில் சிவ தரிசனஞ் செய்து, பாய் சயனம், கொட்டை (தலையணை) முதலாகியவையும் விட்டு, மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்தரங் கேட்க வேண்டும். செபஞ் செய்துகொண்டிருக்க வேண்டும். சந்தனம், புட்பம், தாம்பூலம், இராகம்,. சுகம், பெருந்தூக்கம் முதலானவையும் விட்டிருக்க வேண்டும். “
-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Comments

Popular Posts